இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இதில் பா.ஜனதா வேட்பாளரான வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் 10ம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல இடம்பெறுகின்றது.
இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரான வெங்கையா நாயுடுவும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் ஆளுனருமான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளதால், இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 7 மணியளவில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது